செய்திகள்

கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யாவிட்டால் போராட்டம்: டி.ராஜேந்தர்

கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் லட்சிய தி.மு.க. போராட்டம் நடத்தும் என டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

மாலை மலர்

திருவிடைமருதூர்:

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கதிராமங்கலம் பொது மக்கள் நடத்தி வரும் காத்திருப்பு போராட்டத்தில் இன்று லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால் இப்பகுதி பாலைவனமாகும் அபாயம் உள்ளது.

80-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை கொண்ட தி.மு.க. இப்பிரச்சனை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவராமல் உள்ளது. இதற்கு காரணம் இது தி.மு.க.ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும்.

கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர். இது கண்டிக்கதக்கது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் லட்சிய தி.மு.க. போராட்டம் நடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.