கூட்டத்தில் டி.ராஜேந்தர் பேசியபோது எடுத்த படம். 
செய்திகள்

காவிரி உரிமையை காவு கொடுத்துவிட்டு உரிமை மீட்பு பயண நாடகம் - டி.ராஜேந்தர்

காவிரி உரிமையை காவு கொடுத்து விட்டு இன்று உரிமையை மீட்க நடைபயணம் செல்வதாக நாடகம் ஆடுகிறார்கள் என்று லட்சிய தி.மு.க. நிறுவன தலைவர் டி.ராஜேந்தர் கூறினார். #CauveryIssue #CauveryMangementBoard

லட்சிய திராவிட முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் லட்சிய தி.மு.க. நிறுவன தலைவர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் தான் உயிர் மூச்சு என்று கருதி வாழ்ந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர் அரசியல்வாதிகள் நாடகம் ஆடுகிறார்கள். நான் எத்தனையோ முதல்-அமைச்சர்களை பார்த்துள்ளேன். மக்களுக்கு நல்லது செய்தால் அதை எடுத்துக்கூறுவேன். அண்ணா மறைவுக்குப்பின்னர் காவிரி தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றது யார்? மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது யார்?. காவிரி உரிமையை காவு கொடுத்து விட்டு இன்று உரிமையை மீட்க நடைபயணம் செல்வதாக நாடகம் ஆடுகிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருந்தால் தான் ஓட்டுபெற முடியும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் செயல்படுகிறது. ஆனால் இங்கு காங்கிரசுடன் சேர்ந்து தி.மு.க. போராடுகிறது. தி.மு.க. காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் மோடி கூட்டணி வைத்துள்ளார். மாணவர்களை போராட வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் எதற்கு கூறுகிறார்கள்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை வேடம் போட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு மோடி துணை போகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கைகளை தாங்கிப்பிடிக்க, தமிழகத்துக்கு துரோகம் செய்தவர்களை நான் மக்களுக்கு அடையாளம் காட்டுவேன்.

இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue  #CauveryMangementBoard

SCROLL FOR NEXT