செய்திகள்

கடலில் தத்தளித்த யானையை மீட்டு கரை சேர்த்த இலங்கை கடற்படை

இலங்கையின் கொக்கிளாய் பிரதேசத்தில், கடலில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருந்த யானையை அந்நாட்டு கடற்படையினர் மீட்டு கரை சேர்த்தனர்.

கொழும்பு:

இலங்கை வடக்கு கடல் எல்லையின் கொக்கிளாய் பிரதேசத்தில் அந்நாட்டு கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலுக்குள் யானை ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

கரையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த யானை தத்தளித்துக் கொண்டிருந்தது. கரையோரமாக சென்று கொண்டிருந்த போது அலைகளால் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 

இதனையடுத்து, கடற்படை வீரர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையில் வனவிலங்கு ஆணைய அதிகாரிகளும் இணைந்து, அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப யானையைக் காப்பாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

யானை அதிக எடை கொண்டவை என்பதால் வீரர்கள் அதிக அளவிலான நேரம் நீரில் இருந்து மீட்பு பணிகளை செய்தனர். பெரிய அளவிலான கயிறைப் பயன்படுத்தி, கடலில் சிக்கியிருந்த யானை கரைக்குக் கொண்டு வரப்பட்டது. 

பின்னர், மீட்கப்பட்ட யானை வனவிலங்குப் பராமரிப்புப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு வனவிலங்கு பராமரிப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.