திருவொற்றியூர்:
திருவொற்றியூர் கடற்கரை சாலையில் உள்ள கே.வி.கே. குப்பம், ஒண்டிக்குப்பம், திருச்சிணாங்குப்பம், கடற்கரைப் பகுதிகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் கடற்கரையில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி உயிர் இழந்தனர்.
இதில் 3 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. ஒரு மாணவன் உடலை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
திருவொற்றியூர் கடற்கரை பகுதிகளில் உயிரிழப்புகளை தடுப்பதற்காக போலீசார் திருவொற்றியூர், கே.வி.கே.குப்பம், ஒண்டிகுப்பம், திருச்சினாங்குப்பம், கடற்கரை பகுதிகளில் கடலில் குளிக்க தடை விதித்து உள்ளனர்.
மேலும் எச்சரிக்கை பலகையை அந்த பகுதிகளில் வைத்துள்ளனர். இதனை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் திருவொற்றியூர் போலீசார் வைத்தனர்.
இதில் திருவொற்றியூர் போலீஸ் உதவி கமிஷனர் சிவசங்கரன். இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் உட்பட போலீசார் கலந்து கொண்டனர்.
எச்சரிக்கை பலகையில் சமீபத்தில் எத்தனை பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.