செய்திகள்

பெண் பத்திரிகையாளர் பற்றி அவதூறு கருத்து- அம்பத்தூர் நீதிமன்றத்தில் எஸ்வி சேகர் ஆஜர்

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அம்பத்தூர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் இன்று ஆஜரானார். #SVeShekher

மாலை மலர்

அம்பத்தூர்:

நடிகரும், பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான எஸ். வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

எஸ்.வி.சேகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்ககத்தின் சார்பில் சேகரன் என்பவர் அம்பத்தூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று காலை நீதிபதி அனிதாஆனந்தன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராக நடிகர் எஸ்.வி.சேகர் காலை 11 மணியளவில் அம்பத்தூர் நீதிமன்றத்துக்கு வந்தார். பின்னர் அவர் தனது வக்கீல்களுடன் ஆஜர் ஆனார்.

அப்போது எஸ்.வி.சேகர் தரப்பு வக்கீல்கள் கூறும் போது, இது தொடர்பாக பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. அனைத்தையும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரே வழக்காக விசாரிக்க மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவின் நகலை தாக்கல் செய்யும்படியும் எஸ்.வி.சேகரை அன்றும் ஆஜராகும்படியும் தெரிவித்தார். #SVeShekher