செய்திகள்

அஜர்பைஜான் சென்றடைந்தார் சுஷ்மா - அணி சேரா இயக்க மாநாட்டில் பங்கேற்கிறார்

அணி நேரா இயக்கத்தில் உள்ள நாடுகளின் மந்திரிகள் பங்கேற்கும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் அஜர்பைஜான் சென்றடைந்தார்.

மாலை மலர்

பாகு:

ஜவஹர்லால் நேரு, எகிப்து தலைவர் ஜமால் நாசர் உள்ளிட்டோரால் 1961-ம் ஆண்டு அணிசேரா இயக்கம் தொடங்கப்பட்டது. எந்த ஒரு அதிகார மையத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ அணி சேராத நாடுகளின் குழுமாகும். தற்போது 120 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன.

ஐரோப்பிய, ஆசிய நாடான அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்த இயக்கத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் மந்திரிகள் பங்கேற்கும் இடைக்கால மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் பாகு நகருக்கு சென்றடைந்தார். அவரை அந்நாட்டின் மந்திரி மற்றும் இந்திய தூதர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதனை அடுத்து அதிபர் மாளிகைக்கு சென்ற அவரை அதிபர் இல்ஹாம் அலியேவ் வரவேற்றார். இதனை அடுத்து, இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். #TamilNews