கம்பம்:
தேனி மாவட்டத்தில் தமிழக- கேரள எல்லையையொட்டி தமிழக வனப்பகுதிகள் அமைந்துள்ளன. குமுளியில் தொடங்கி போடி மெட்டு வரை இது நீள்கிறது. இதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் ரிசர்வ் பாரஸ்ட் பகுதிகள் கேரளாவின் அருகில் உள்ளன.
இதனால் அப்பகுதியில் கேரளாவை சேர்ந்தவர்கள் கடைகள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தனர். இது குறித்து ஆய்வு நடத்த கடந்த 7-ந் தேதி இரு மாநில அதிகாரிகள் கம்பம் மெட்டில் கூட்டாக சர்வே செய்தனர்.
அப்போது தமிழகத்திற்கு சொந்தமான வனப்பகுதிகள் அதிக அளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரிய வந்தது இதனையடுத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அதனை அகற்ற உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலருக்கு தெரிவிக்கப்பட்டது. தமிழக வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தால் அங்கே நில அளவைக் கல் ஊன்றுமாறு அவர் உத்தரவிட்டார்.
அதன்படி தமிழக வனத்துறை அதிகாரிகள் உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார் தலைமையில் கம்பம் மெட்டில் சர்வே கல் ஊன்றும் பணியை தொடங்கினர்.
உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் குமார், ரேஞ்சர் காஜாமைதீன் ஆகியோர் முன்னிலையில் நில அளவை கல் நடும் பணி தொடங்கியது.
இரு மாநில எல்லையில் இப்பணி நடைபெற்றதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.