நடிகர் சூர்யா நடித்த என்.ஜி.கே படம் ஆந்திராவிலும் வருகிற 31-ந்தேதி தெலுங்கில் வெளியாகி உள்ளது. அதுகுறித்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஐதராபாத் வந்த நடிகர் சூர்யா ஆந்திரா அரசியல் குறித்து நிருபர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை எனக்கு நீண்ட காலமாக தெரியும். அவர் குடும்பத்தை சேர்ந்த அனில் ரெட்டி என்னுடன் படித்தவர். ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி சாதித்த வெற்றி அபூர்வமானது. அவரது தந்தை முதல்வராக இருந்த போது அவர் அமல்படுத்திய பல நலத்திட்டங்கள் ஏழைகளுக்கு எவ்வளவு பயன் அளித்தது என்பது தெரியும். எதிர்பாராத வகையில் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த பிறகு ஜெகன்மோகன் ரெட்டி செய்து வரும் அரசியல் போராட்டம் குறித்தும் தெரியும். 10 ஆண்டுகளாக மக்கள் மத்தியிலேயே இருந்து எத்தனையோ கஷ்டங்கள் அனுபவித்தார். 14 மாதங்கள் 3664 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ‘‘யாத்ரா’’ என்ற சினிமா படம் வெளியிடப்பட்டது. இதில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி நடித்து இருந்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.