புதுடெல்லி:
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் சட்டமான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் சில திருத்தங்களை செய்து சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது. அதன்படி, இந்த சட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகளை உரிய விசாரணை இன்றி உடனடியாக கைது செய்ய கூடாது, மேலும் அரசு ஊழியர்களுக்கு இந்த வழக்குகளில் முன் ஜாமீன் வழங்குவதற்கு முழுமையான தடை இல்லை என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தலித் அமைப்புகள் நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடத்தின. வட மாநிலங்களில் போராட்டம் கலவரமாக மாறியது. மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடந்த மோதலில் பலர் பலியாகினர். பேருந்து, கார் உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய 150 தலித் அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நேற்று மறுத்து விட்டது.
இதனிடையே மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நேற்று மனு தாக்கல் செய்தது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவும், முந்தைய நிலை தொடர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை ஏற்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இன்னும் அடக்குமுறை நடந்து வருகிறது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. மேலும், திறந்த நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையும் ஏற்கப்பட்டது. #BharatBandh #SCSTact #supremecourt