செய்திகள்

பிரியா வாரியர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு - சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதமாக பாடலை காட்சிப்படுத்தியுள்ளதாக கூறி பிரியா வாரியர் மீது பதிவு செய்த வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. #PriyaPrakashWarrier

புதுடெல்லி:

மலையாள நடிகை பிரியா வாரியர் தனது கண் அசைவால் ஒரே நாளில் நாடுமுழுவதும் இளைஞர்களை கவர்ந்து விட்டார். அவர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘‘மாணிக்ய மலராய பூவி’’ பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் பிரியா வாரியரின் கண் அசைவுகளும் காதலனைப் பார்த்து கண் சிமிட்டுவதும் இளைஞர்களை சுண்டி இழுப்பதாக அமைந்துள்ளது.

இந்த காட்சிகள் ‘யூ- டியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜிமிக்கி கம்மல் பாடல், ஷெரிலை உச்சத்துக்கு கொண்டு சென்றது போல் ‘ஒரு அடார் லவ்’ பாடல் பிரியா வாரியரை அகில இந்திய அளவில் பரபரப்பாக பேசவைத்துவிட்டது. 

பிரியா வாரியரின் கண் சிமிட்டும் காதல் பாடலை எதிர்த்து தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநில காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பாடல் முகம்மது நபி மற்றும் அவரது மனைவியார் தொடர்பான உணர்வுகளை காயப்படுத்துவதாகவும், இதன் மூலம் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்துவதாக கூறி பிரியா வாரியர், இயக்குனர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார்களில் பிரியா வாரியரை குற்றம் சாட்டப்படும் முதல் நபராகவும், படத்தின் இயக்குநரை இரண்டாவது நபராகவும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கண்ட வழக்குகள் தன்மீது பதிவு செய்துள்ளது ஏற்க முடியாது எனவும், அந்த பாடல் கேரளாவில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாடல் குறித்து எதுவும் தெரியாதவர்கள் புகார் அளித்துள்ளதாவும், தன்மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என பிரியா வாரியர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், அவர் மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை விதித்தனர். அடுத்த கட்டமாக இந்த மனு விசாரிக்கப்படும் வரை எவ்வித கிரிமினல் விசாரணைகளும் இருக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #PriyaVarrier #PriyaPrakashVarrier

SCROLL FOR NEXT