செய்திகள்

ரபேல் வழக்கில் விசாரணை முடிவடைந்தது - தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில், விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. #RafaleDeal #RafaleCase

மாலை மலர்

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. ரபேல் போர் விமானங்களுக்கு விலை நிர்ணயம் செய்ததில் தொடங்கி, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்.

இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை  தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ரபேல் விலை விவரங்கள் அதில் இடம்பெறவில்லை.

இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நிதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, விமானப்படை அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து இந்திய விமானப்படை அதிகாரிகள் இன்று பிற்பகல் உச்சநீதின்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தனர்.

ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்கெடுத்ததில் இந்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை என்றும், அது டசால்ட் நிறுவனத்தின் முடிவு  என்றும் மத்திய அரசு கூறியது.

ஆனால், ரபேல் விலை தொடர்பான ரகசியங்களை அரசு மறைப்பதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டினார். நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். இதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.