செய்திகள்

ஹர்திக் படேல் மேல்முறையீடு - அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

படேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் மேல்முறையீடு கேட்டு ஹர்திக் படேல் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தனர். #HardikPatel #SupremeCourt

புதுடெல்லி:

குஜராத் மாநிலம் விஸ்பூர் பகுதியில் படேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதுதொடர்பான வழக்கில் சமூக சேவகர் ஹர்திக் படேலுக்கு விசாரணை கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் குஜராத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை ஐகோர்ட்டு நிராகரித்தது.

இதையடுத்து அவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு குஜராத் ஜாம்நகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை தேர்தலில் போட்டியிட தடையாக உள்ளது.

இதற்கிடையே குஜராத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். வேட்பு மனுதாக்கல் செய்ய நாள் நெருங்கிவிட்டதால் தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஹர்திக் படேல் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சந்தானகவுடர், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT