புதுடெல்லி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சைதன்ய சிரவந்தி என்ற தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘மது விற்பனை செய்யப்படுவதால் அதை அருந்துவோருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது. மரணங்களும் அதிக அளவில் நிகழ்கின்றன. குற்றங்கள் மற்றும் விபத்துகளின் எண்ணிக்கையும் பெருகி வருகின்றன. குடிப்பழக்கம் காரணமாக மக்கள் பணத்தையும் இழக்கின்றனர். எனவே நாடு முழுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்கவேண்டும். மேலும் மது உற்பத்தி, வினியோகம், விற்பனை, பல்வேறு ரக மதுபானங்களின் நுகர்வு குறித்தும் தணிக்கை செய்யவும் கோர்ட்டு உத்தரவிடவேண்டும்’ என்று அதில் கூறப்ப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவில் எந்த தகுதியும் இல்லை என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் வழக்கை தொடர்ந்த தொண்டு நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த நீதிபதிகள் அந்த தொகையை 4 வாரங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டின் சட்ட சேவை குழுவின் கணக்கில் டெபாசிட் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.