புதுடெல்லி:
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் அவர் மீதான லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.
ஐ.என்.எஸ். மீடியாவுக்கு நிதித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதில் முறைகேடாக பணம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அவரது வீட்டில் சோதைனயும் நடத்தப்பட்டது.
இது குறித்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. அவர் விசாரணைக்கு ஆஜராகாததை தொடர்ந்து அவரை தேடப்படும் நபராக மத்திய அரசு அறிவித்து, லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது லுக்-அவுட் நோட்டீஸ் நவம்பர் 9-ம் தேதி வரை நீட்டிக்கபடுவதாகவும், இது தொடர்பாக சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வேறு தேதிக்கு ஒத்தி வைத்தனர்.