செய்திகள்

கல்வி பயிலுவதற்காக மாணவர்கள் 3 கி.மீ. நடந்து செல்வார்கள் என எதிர்பார்க்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு கருத்து

மாணவர்கள் 3 கி.மீ. தூரத்துக்கு நடந்து சென்று கல்வி பயிலுவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது, அரசியல் சட்டத்தின் படி 14 வயது வரை அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டியது அடிப்படை உரிமை என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

கேரளாவின் பரப்பனங்காடி பகுதியை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஒன்றை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த மாநில அரசு கடந்த 2015-ம் ஆண்டு அனுமதி அளித்தது. ஆனால் இதை எதிர்த்து மற்றொரு பள்ளி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த ஐகோர்ட்டு மாநில அரசின் அனுமதியை ரத்து செய்தது.

இதைத்தொடர்ந்து அந்த தொடக்கப்பள்ளி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த பள்ளியில் படிப்பை முடிக்கும் மாணவர்கள் உயர்கல்விக்காக 3 கி.மீ. தொலைவுக்கு மேல் நடந்தே செல்ல வேண்டிய அவலநிலை இருப்பதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து, ஐகோர்ட்டின் உத்தரவை தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறுகையில், 10 முதல் 14 வயது வரையிலான மாணவர்கள் 3 கி.மீ. தூரத்துக்கு நடந்து சென்று கல்வி பயிலுவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அரசியல் சட்டத்தின் 21ஏ பிரிவின் படி 14 வயது வரை அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டியது அடிப்படை உரிமையாகும். இதை அர்த்தமுள்ள வகையில் செயல்படுத்த வேண்டுமென்றால் நடுநிலைப்பள்ளிகளை திறக்க வேண்டும். எந்த மாணவனும் பள்ளி படிப்புக்காக 3 அல்லது அதற்கு மேலான தொலைவுக்கு நடந்து செல்லமாட்டான்’ என்று தெரிவித்தனர். 

SCROLL FOR NEXT