செய்திகள்

எனது பாட்டிக்கு ஆதரவளித்தது போல் என்னையும் ஆதரிக்க வேண்டும் - ராகுல் காந்தி

கர்நாடகத்தின் சிக்மகளூரு தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசய ராகுல் காந்தி, எனது பாட்டிக்கு ஆதரவளித்தது போல் என்னையும் ஆதரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாலை மலர்

பெங்களூரு:

கர்நாடக மாநில சட்டசபை பதவிக்காலம் மே மாதம் 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அங்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சியாக உள்ள காங்கிரசும், எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ.க.வும் அங்கு முழுவீச்சில் பிரசாரத்தை தொடங்கி விட்டன.

காங்கிரஸ் கட்சி பெல்லாரியில் பிரசாரத்தை தொடங்கியது. இரண் டு கட்டங்களாக 6 மாவட்டங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். 3வது கட்டமாக நேற்று முன்தினம் அங்கு பிரசாரம் மேற்கொண்ட அவர், மங்களூருவில் கோயில், சர்ச், மசூதி என வழிபாட்டு தலங்களை வலம் வரத் தொடங்கினார்.

இந்நிலையில், நேற்று சிக்மகளூர் தொகுதியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 1978ம் ஆண்டில் எனது பாட்டி இந்திரா காந்திக்கு மகத்தான ஆதரவு அளித்து வெற்றி பெற செய்தீர்கள். இதனை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அதேபோல், தற்போது எனக்கும் ஆதரவு அளிக்க வேண்டும்.

பிரதமர் மோடி, இங்கு வந்து உங்கள் முன் ஊழல் குறித்து பேசுகிறார். ஆனால் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றவர்கள் பலர் அவருடன் ஒரே மேடையில் அமர்ந்துள்ளனர்.

எல்லையில் உள்ள டோக்லாமில் ஹெலிபேட் மற்றும் விமான நிலையங்களை சீனா அமைத்து வருகிறது. அது குறித்து பிரதமர் ஏன் வாய் திறக்காமல் அமைதியாக உள்ளார்? என கேள்வி எழுப்பினார்.