ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 47). இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்
இந்த சூப்பர் மார்க்கெட்டின் கீழ்தளத்தில் அனைத்துப் பொருட்களும் விற்பனைக்கு இருந்தன. முதல் மாடியில் பொருட்கள் வைப்பதற்கான ‘குடோன்’ இருந்தது.
இன்று காலை 9 மணியளவில் ‘சூப்பர் மார்கெட்’ கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். அவர்கள் மெயின்சுவிட்சை போட்டனர்.
அப்போது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. கடை ஊழியர்கள் முதலில் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமள என்று பரவி கீழ்தளம் முழுவதும் பரவிக்கொண்டது.
இது குறித்து ஆதம்பாக்கம் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கிண்டி, வேளச்சேரியில் இருந்து 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். இதே போல் 3 தண்ணீர் லாரிகள் மூலமும் தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 1½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்து காரணமாக ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
தீ விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.