செய்திகள்

சூரிய கதிர்களால் சாட்டிலைட் தொலைக்காட்சி சேவை பாதிப்பு

இந்தியாவில் தனியார் தொலைக்காட்சி சேவை வழங்கும் நிறுவனங்கள், சூரிய கதிர்களால் ஒளிபரப்பு சேவைக்கு இடையூறு ஏற்பட்டதாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளன.

இந்தியாவில் தொலைக்காட்சி சேவை வழங்கும் பணியினை பல்வேறு தனியார் நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. இவை தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை செயற்கைக்கோள் உதவியுடன் ஒளிபரப்பி வருகின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சி தொலைக்காட்சி சேவையில் பல்வேறு பரிணாமங்களை கடந்துள்ள போதும் இயற்கை சீற்றங்களின் முன், எத்தகைய தொழில்நுட்பமும் செயலிழக்கும் சூழல் இயற்கையான ஒன்று. இதனை நாம் அனைவரும் பல தருணங்களில் அனுபவித்திருப்போம்.

வழக்கமாக நம் வீடுகளில் பயன்படுத்தி வரும் சாட்டிலைட் தொலைக்காட்சி சேவையானது பூமியில் இருக்கும் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சாட்டிலைட் உதவியோடு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பல்வேறு சாட்டிலைட் சேனல்களும் தங்களது சேவையை பூமியில் இருந்து சாட்டிலைட்களுக்கு அனுப்புகின்றன. அங்கிருந்து ரிசீவர்கள் மூலம் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெற்று, சந்தாதாரர்களுக்கு அனுப்பும்.

முற்றிலும் சாட்டிலைட் கதிர்களால் இயங்கி வரும் தொலைக்காட்சி சேவையானது அவ்வப்போது வெளுத்து வாங்கும் மழை, புயல் உள்ளிட்டவற்றில் பாதிக்கப்படும். இது அனைவருக்கும் பழக்கப்பட்ட ஒன்றாக இருந்து வந்த நிலையில், இன்று மதியம் சூரிய கதிர்களால் சாட்டிலைட் தொலைக்காட்சி சேவை பாதிக்கப்பட்டது.

இந்தியாவில் பிரபலமாக இருக்கும் தனியார் சாட்டிலைட் தொலைக்காட்சி சேவை வழங்கும் நிறுவனங்களின் சேவை சூரிய கதிர்களால் சில நிமிடங்கள் தடைப்பட்டது. இன்று மதியம் ஏற்பட்ட சூரிய கதிர் தாக்குதலானது வழக்கத்திற்கு மாறாக சாட்டிலைட் கதிர்களை மறித்ததால் சாட்டிலைட் சேவை பாதிக்கப்படுகிறது என குறிப்பிட்ட தொலைக்காட்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்தன.