பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரம் ஆழ்துளை கிணறுகளின் தண்ணீரை கொண்டு கோடை நெல் சாகுபடி பணிகள் முடிவடைந்துள்ளன.
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பயிர் செய்யப்பட்டுள்ள கோடை நெல் தற்போது இரண்டாம் களை எடுப்பு தருணத்தில் உள்ளது. வயல்களில் ஆட்கள் களையெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி பகுதியில் இந்த ஆண்டு 3130 ஏக்கர் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கோடை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு அரசு ஊக்க தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கோடை மழை அவ்வப்போது பெய்துவரும் நிலையில் இந்த பகுதியில் பயிர் செய்யப்பட்டுள்ள நெற்பயிர் நல்ல நிலையில் உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் ஆழ்துளை கிணற்றுத் தண்ணீரை பயன்படுத்தி உளுந்து மற்றும் எள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோடை சாகுபடியாக செய்யப்பட்டுள்ள நெல், உளுந்து, எள் ஆகிய பயிர்களும் நல்ல நிலையில் உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.