மு.க.ஸ்டாலின் 
செய்திகள்

சுஜித்தை மீட்கும் பணியில் அரசு மெத்தனமாக இருந்தது- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணியில் அரசு மெத்தனமான இருந்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

மாலை மலர்

திருச்சி:

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்க 5 நாட்களாக பல்வேறு மீட்புக்குழுவினர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. 

இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சுஜித் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அங்கு சென்று சுஜித்தின் கல்லறையில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். சுஜித்தின் பெற்றோரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், சுஜித்தை மீட்கும் பணியில் அரசு மெத்தனமான செயல்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார். 

“குழந்தை 26 அடி ஆழத்தில் இருந்தபோதே மீட்டிருக்க முடியும். குழந்தையை மீட்க ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை? இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அரசியல் சாயம் பூசப்படும் என்பதால் தான் குழந்தை சுஜித் மீட்பு பணியை நேரில் பார்வையிடவில்லை” என ஸ்டாலின் கூறினார்.

கே.என்.நேரு, திருச்சி சிவா, திருநாவுக்கரசர், ஜோதிமணி எம்பி ஆகியோரும் சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.