செய்திகள்

கொல்கத்தா: ரெயில் முன் பாய்ந்து வாலிபர் பலி- மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு

மேற்கு வங்காள மாநில தலைநகரான கொல்கத்தாவில் இன்று ஓடும் ரெயிலின் முன்னர் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் மெட்ரோ ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

கொல்கத்தா:

கொல்கத்தா நகரில் உள்ள ரபிந்திர சரோபர் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்தில் இன்று காலை வழக்கம்போல் பயணிகள் குவிந்திருந்தனர். காலை 11.30 மணியளவில் ரெயில் நிலைய நடைமேடையில் காத்திருந்தவர்களில் ஒரு வாலிபர்  அங்கு வந்த ரெயிலின் முன்னால் திடீரென்று பாய்ந்தார்.

ரெயிலில் அடிபட்டு உடல் சிதைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த அசம்பாவிதத்தால் பபரப்பான போக்குவரத்து நேரத்தில் ரபிந்திர சரோபர்-கவி சுபாஷ் நிலையங்களுக்கு இடையிலான மெட்ரோ ரெயில் சேவை பாதிப்படைந்தது.

தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ரெயில்வே போலீசார் இறந்த நபர் யார்? என்பதை அடையாளம் காண்பதற்கான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.