செய்திகள்

மதுரையில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை முயற்சி

மதுரையில் என்ஜினீயரிங் மாணவர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை:

மதுரை மேலமாசிவீதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விக்னேஷ் பாபு (வயது 23). இவர் மதுரையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இன்று காலை பெற்றோர் அழகர்கோவிலுக்கு சென்றுவிட, விக்னேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் காலை 9 மணிக்கு விக்னேஷ் தனது பேஸ்புக்கில் தனது கை மணிக்கட்டை பிளேடால் அறுத்து ரத்த வழிந்த நிலையில் ஒரு போட்டோவை பதிவிட்டார். அதற்கு கீழ் ‘நான் நிம்மதியாக தூங்கப்போகிறேன்’ என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

இதை பார்த்த விக்னேசின் பேஸ்புக் நண்பர்கள் உடனே அவரது பெற்றோருக்கும், திடீர்நகர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விக்னேசின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். ஆனால் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

அப்போது விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு விக்னேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு புளுவேல் விளையாட்டால் பலர் தற்கொலை செய்து கொண்டனர். விக்னேசும் இந்த விளையாட்டால் தற்கொலை முடிவை எடுத்தாரா? அல்லது வேறு பிரச்சினையில் தற்கொலைக்கு முயன்றாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews

SCROLL FOR NEXT