டெல்லி:
‘இந்தியாவின் மோஸ்ட் வாண்டட்’ என்ற பெயரில் 1998-ம் ஆண்டுகளில் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. மிகுந்த பிரபலமடைந்த இந்த நிகழ்ச்சியை இயக்கி தயாரித்தவர் சுஹைப் இல்யாசி. 2000-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கிழக்கு டெல்லியில் உள்ள சுஹைப் இல்யாசியின் வீட்டில் அவரது மனைவி அஞ்சு இல்யாசி கத்தி குத்து காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
தனக்கும் தன் மனைவிக்கு சண்டை ஏற்பட்டது, அதனால், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சுஹைப் போலீசில் கூறினார். ஆனால், தனது மகளை சுஹைப்தான் கொன்று விட்டதாக அஞ்சுவின் தாயார் புகாரளித்தார். இதனையடுத்து, சுஹைப்பை கைது செய்த போலீசார் அவரை சிறையிலடைத்தனர்.
கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் அவரை குற்றவாளி என 14-ம் தேதி டெல்லி செசன்ஸ் கோர்ட் அறிவித்தது. இந்நிலையில், அவருக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன. மனைவியை கொடுரமாக கொன்ற குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.