வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்திய மாணவிகள். 
செய்திகள்

பேராசிரியை நிர்மலாதேவி பணியாற்றிய கல்லூரியில் ஊழியர்கள் திடீர் போராட்டம்

பணி நிரந்தரம் கேட்டு தேவாங்கர் கலைக்கல்லூரி ஊழியர்கள் மாடியில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

பாலையம்பட்டி:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலா தேவி. இவர், மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில், செல்போனில் பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டு உள்ளார்.

அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தேவாங்கர் கலைக்கல்லூரியில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கல்லூரி நிர்வாகம் மீது புகார்கள் கூறப்பட்டன.

இந்த பிரச்சினை ஓய்வதற்குள் தேவாங்கர் கலைக் கல்லூரியில் மீண்டும் ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. அந்த கல்லூரியில் 30-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் உள்ளனர். இதில் காசாளராக பணியாற்றுபவர் தனலட்சுமி. இவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு பணி நிரந்தரம் செய்வதில் கல்லூரி நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக திடீர் போர்க்கொடி உயர்த்தினார். அதே கல்லூரியில் பணியாற்றும் சுகஸ்தலா, மகாதேவி, கலைச்செல்வி ஆகியோரும் தனலட்சுமியுடன் இணைந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

பணி நிரந்தரம் செய்வதில் சீனியாரிட்டி கடைபிடிக்கவில்லை, தற்போது புதிதாக வந்தவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டுள்ளது என அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் 4 பெண் ஊழியர்களும் இன்று காலை கல்லூரியின் மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதிக்கப்போவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். கல்லூரி முதல்வர் பாண்டியராஜ், தனலட்சுமி உள்ளிட்ட 4 ஊழியர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். நீண்ட நேர சமரசத்திற்கு பின்னர் 4 ஊழியர்களும் கீழே இறங்கி வந்தனர்.

இதற்கிடையில் தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கினர். தங்களது கல்லூரியில் அடிக்கடி நடக்கும் பிரச்சினைகளால் கல்வி பாதிக்கப்படுவதாக தெரிவித்த அவர்கள், கல்லூரி அலுவலக அறை முன்பு அமர்ந்து கோ‌ஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.