டிரம்ப் - நெதன்யாகு - அப்துல் ஹம்டெக் 
செய்திகள்

இஸ்ரேல் - சூடான் இடையே அமைதி ஒப்பந்தம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

இஸ்ரேல் மற்றும் சூடான் நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

வாஷிங்டன்:

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதன் பயனாக 1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடம் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தன.

ஆனால், பிற அரபு  நாடுகள் இஸ்ரேலுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தன. மேலும், இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமலும், அந்நாட்டுடன் பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்த வித உறவுகளையும் ஏற்படுத்தாமல் இருந்தன.

ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தன.

இதையடுத்து, அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் கடந்த மாதம் 15 ஆம் தேதி இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் - பஹ்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆபிரகாம் உடன்படிக்கை என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் மூலம் இந்நாடுகள் இடையே அமைதி ஏற்பட வழி பிறந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டு அந்நாட்டுடன் விமானப்போக்குவரத்து, தூதரக நடவடிக்கைகள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறையில் இணைந்து செயல்பட ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளன.

இதையடுத்து, பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையே விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தூதரக உறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அரபு நாடுகளில் ஒன்றான சூடானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால், இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்த 3-வது அரபு நாடு என்ற பட்டியலில் சூடான் இணைந்துள்ளது.

முன்னதாக, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கு நாடு என்ற பட்டியலில் இருந்த சூடானை அமெரிக்கா நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல்-சூடான் இடையேயான அமைதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குறிப்பாக சவுதி அரேபியா - இஸ்ரேல் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.