சென்னை:
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் சுற்றுலா பயணிகள், பொது மக்களை கவரும் வகையில் ஒரு நாள், 3 நாள், 5 நாட்களுக்கான ‘பாஸ்’ வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் இந்த ‘பாஸ்’கள் மூலம் பயணிகள் எளிதில் பயணம் செய்யலாம்.
ஒரு நாள் முழுவதும் பயணம் செய்யும் வகையில் 2-ம்வகுப்பு ரெயில் பாஸ் ரூ.70-க்கு கிடைக்கும் முதல் வகுப்பு ‘பாஸ்’ ரூ.295-க்கு வழங்கப்படுகிறது.
இந்த ‘பாஸ்’ வாங்கியவர்கள் சென்னையில் உள்ள அனைத்து மின்சார ரெயில்களிலும் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்யலாம்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் புறநகர் மின்சார ரெயில்களில் ‘பாஸ்’வசதி அறிமுகம் செய்துள்ளோம். ரெயில் நிலையங்களில் ஒரு நாள், 3நாள், 5 நாட்கள் என 3 வகையான பாஸ்கள் வினியோகம் செய்யப்படும்.
இந்த பாஸ் மூலம் புறநகர் மின்சார ரெயில்களில் விரும்பிய இடங்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.
இதன் மூலம் ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க பயணிகள் காத்திருக்கும் நேரம் குறையும் ரெயில்வே நிலையங்களில் காணப்படும் நீண்ட கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.