புதுடெல்லி:
பண மதிப்பிழக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு அடுத்து அதிக அளவில் பேசப்பட்ட பெயர் மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளராக இருந்த சக்திகாந்த் தாஸ் தான்.
இதனையடுத்து, சக்தி காந்த தாஸ் மே மாதத்துடன் (மே 31) ஓய்வு பெற்றார். அந்த பதவிக்கு கார்ப்பரேட் விவகார செயலாளராக இருக்கும் தபன் ராய் கூடுதல் பொறுப்பேற்று கொண்டார்.
இந்நிலையில், மத்திய பொருளாதார மற்றும் நிதித்துறை அமைச்சக விவகாரங்களுக்கான புதிய செயலராக சுபாஷ் சந்திர கார்க் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக உலக வங்கியின் செயல் இயக்குநராக இருந்த சுபாஷ் சந்திராவை கடந்த ஜூன் 12-ம் தேதி புதிய செயலாளராக மத்திய அரசு நியமித்து இருந்தது.
நிர்வாகம், மேலாண்மை மற்றும் நிதி, விவசாயம், கல்வி துறைகளுக்கான கொள்கைகள் வகுப்பதில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.