சென்னை:
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் திராவிட கழக பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர்.
பின்னர் சுப.வீரபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வு தமிழகத்திற்கு சாபக்கேடாகும். அதனால் மாணவி அனிதா பலியாகியுள்ளார். இதுவே கடைசி நிகழ்வாக இருக்க வேண்டும். இது போன்ற சம்பவம் இனிமேல் தமிழகத்தில் நிகழக்கூடாது.
பிரதமர் மோடியின் ஆட்சி ஒரு மோசடியான ஆட்சியாகும். மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்படுகிறது.
மத்திய, மாநில அரசுகளின் நிலையை தோளுரித்து காட்ட வேண்டும்.
நீட் தேர்வினால் தமிழகத்தில் மருத்துவ மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. ஏழை-எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள 22 மருத்துவ கல்லூரிகளும் ஏழை மாணவர்கள்தான் படிக்க வேண்டும்.
நாங்கள் கட்டியுள்ள வீட்டில் வேறு யாரையோ கிரக பிரவேசம் செய்ய கூறுவது வேடிக்கையாக உள்ளது. இதை தடுத்து நிறுத்துவதற்காக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டங்கள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.