செய்திகள்

சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியான விவகாரம் - ஜந்தர்மந்தரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் சிபிஎஸ்இ கேள்வித்தாள் வாட்ஸ் அப்பில் வெளியானதை கண்டித்து மாணவர்கள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #CBSEPaperLeak

மாலை மலர்

புதுடெல்லி:

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 10-ம் வகுப்பிற்கான கணிதப் பாடம் மற்றும் கடந்த திங்கட்கிழமை நடந்த 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாள்கள் வாட்ஸ்-அப்பில் வெளியானதாக கூறப்பட்டது. 

முதலில் இந்த குற்றச்சாட்டை மறுத்த சிபிஎஸ்இ, நேற்று மறுதேர்வு நடத்த முடிவு செய்தது. இதுகுறித்து சிபிஎஸ்இ இணைய தளத்தில், 12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். தேர்வு நடத்தப்படும் தேதி மற்றும் பிற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தது.

கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக சிபிஎஸ்இ கொடுத்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் சிபிஎஸ்இ கேள்வித்தாள் வாட்ஸ் அப்பில் வெளியானதை கண்டித்து மாணவர்கள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கும் சிபிஎஸ்இக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர். #CBSEPaperLeak #Tamilnews