தஞ்சையில் மாணவர் சங்கத்தினர் முட்செடி மற்றும் இரும்புகவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி. 
செய்திகள்

தஞ்சையில் மாணவர் சங்கத்தினர் நூதன போராட்டம்

உ.பி.யில் இளம்பெண் பாலியல் படுகொலையை கண்டித்து தஞ்சையில் மாணவர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். முட்செடி மற்றும் இரும்புகவசம் உடலை சுற்றி அவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது பட்டியல் இன பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி தஞ்சை ரெயிலடியில் நேற்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் வீரைய்யன், துணை தலைவர் பிரபாகரன், மாணவி தீபிகா மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும். இந்தியாவிலுள்ள பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாணவர்கள் பெண்கள் வேடமிட்டு இரும்பு உடையணிந்தும், மாணவி இரும்பு கவசம் அணிந்தும் முள்வேலி அணிந்து கொண்டும் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.