விழுப்புரம் அருகே அன்னியூர் கிராமத்தில் மருத்துவ கல்லூரி மாணவி சரஸ்வதியை அவரது காதலன் கார்த்திக் வேல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்பு கார்த்திக்வேலும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுட்டு கொல்லப்பட்ட மாணவி சரஸ்வதியின் உடலை பார்த்து அவரது தந்தை சேகர் கதறி அழுதார். பின்பு அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-
நான் சாதாரன விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனக்கு 2 மகள்கள். மூத்த மகள் சரஸ்வதி. அவள் சிறுவயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் கொண்டவள். பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தாள். இதன் காரணமாக அவளுக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது.
அவள் டாக்டராகி கிராம மக்களுக்கு சேவை செய்வேன் என்று அடிக்கடி கூறுவாள். அவள் நன்றாக படித்து வந்தாள். இந்த நிலையில் தான் என் மகளுக்கும் போலீஸ்காரர் கார்த்திக்வேலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த விபரம் அறிந்த நாங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நேற்று இரவு சரஸ்வதிக்கு பிறந்தநாள் விழா வீட்டில் சிறப்பாக கொண்டாடினோம்.
நீன்டநேரம் சரஸ்வதியும், கார்த்திக்வேலும் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று அவர்கள் அறையில் இருந்து துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது என் மகளும், கார்த்திக்வேலும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.