வால்பாறை:
ஈரோடு மாவட்டம் கிருஷ்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சையத் சிராஜ். இவரது மகன் சையத் ஷாகிள் (வயது 13). 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவரது அண்ணன் சையத் சாலிக். இவர்கள் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர். இந்த நிலையில் நேற்று சையத் ஷாகிள், தனது தந்தை சையத் சிராஜ், அண்ணன் சையத் சாலிக்குடன் வால்பாறை அருகே உள்ள கருமலை ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தான்.
திடீரென சையத் ஷாகிள் தண்ணீரில் மூழ்கினான். இதனை பார்த்த தந்தை சையத் சிராஜ், சையத் ஷாகிளை காப்பாற்றுவதற்காக ஆற்றில் நீந்தி சென்றுள்ளார். அதற்குள் சையத் ஷாகிள் ஆற்றில் இருந்த பாறை இடுக்கில் சிக்கி கொண்டான். உடனே தந்தை சையத் சிராஜ், அண்ணன் சையத்ஷாலிக் இருவரும் கூச்சலிட்டுக் கொண்டு சையத்ஷாகிளை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தனர். அவர்களுடன் அப்பகுதி பொதுமக்களும் ஓடிச்சென்று பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டிருந்த சையத்ஷாகிளை காப்பாற்றி சிகிச்சைக்காக கருமலை எஸ்டேட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கருமலை எஸ்டேட் ஆஸ்பத்திரியில் சையத்ஷாகிள் உடலை பரிசோதனை செய்த டாக்டர் சிறுவன் சையத்ஷாகிள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வால்பாறை போலீசார் சையத் ஷாகிளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.