பெரம்பூர்:
சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற மின்சார ரெயிலில் நேற்று முன்தினம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
பட்டரவாக்கம் ரெயில் நிலையம் வந்த போது இருதரப்பு மாணவர்களும் அரிவாள், கத்தியுடன் மோதிக் கொண்டனர்.
இதில் மாநிலக் கல்லூரியில் பி.காம், படித்து வரும் அம்பத்தூரை சேர்ந்த தினேஷ், திருநின்றவூரை சேர்ந்த ஜெகதீஷ்குமார், அஜய் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் ரெயில் பயணிகளுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பெரம்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து பச்சையப்பன் கல்லூரி மாணவரான திருநின்றவூரை சேர்ந்த மோகனை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 11 மாணவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மோதல் தொடர்பாக தினேஷ்குமார், ராம்சுந்தர், சுரேந்தர் ஆகிய 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆவர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்த மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மின்சா ரெயில் பயணத்தை தவிர்த்து பஸ்களில் பயணம் செய்து வருகிறார்கள்.
பஸ்சிலும் இருதரப்பு மாணவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதைத் தொடர்ந்து பஸ் நிலையங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். திருவேற்காடு, பூந்தமல்லி, அய்யப்பன் தாங்கல் பகுதியில் இன்று காலை ஏராளமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். #tamilnews