திண்டுக்கல்:
அரியலூர் மாணவி அனிதா மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காததால் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்-திருச்சி 4 வழிச் சாலையில் தாமரைப்பாடி அருகே மூணாண்டிபட்டி பகுதியில் அனைத்திந்திய இளைஞர்கள் பெருமன்றம் சார்பாக வாலிபர்கள் அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்களுக்கு தெளிவான முறையை தெரிவிக்க வில்லை. எனவே கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அனிதா தற்கொலை செய்து கொண்டதும் இதனாலேயே என குற்றம் சாட்டி கோஷங்கள் எழுப்பினர்.
சாலை மறியலால் இரு புறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.