பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம் தர்மபுரியில் நடந்தபோது எடுத்தபடம். 
செய்திகள்

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம் தர்மபுரியில் நடைபெற்றது.

மாலை மலர்

தர்மபுரி:

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1 கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் விவசாயிகளிடம் 75 ஆயிரம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய கோரிக்கை மனுக்களை பிரதமருக்கு தபால் மூலம் அனுப்பும் போராட்டம் தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் டில்லிபாபு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மல்லையன், நிர்வாகிகள் சக்திவேல், சேகர், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி, நிர்வாகி சிவன், வணங்காமுடி, அகில இந்திய விவசாயிகள் இயக்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில் கொண்டு வரப்பட்டுள்ள மின்சார திருத்த சட்டம், வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண்மை சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகியவற்றால் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், வாழ்வாதார பாதுகாப்பிற்கான கோரிக்கைகளை நிறைவேற்றவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனு பிரதமருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டது.