சென்னை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-
வரலாற்று நிகழ்வுகளின் அடையாளமாக நடிகர் திலகம் சிவாஜி விளங்குகிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் ஒட்டுமொத்த உருவமாக அவர் திகழ்கிறார். தமிழர்களின் மனங்களை மட்டுமல்ல உலகளவிலும் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர்.
சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்று தனிப்பட்ட நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். சிவாஜி சிலை அருகில் மட்டும்தான் விபத்து நடக்கிறதா? விபத்தை காரணம் காட்டி சிலையை அகற்றுவதை ஏற்று கொள்ள முடியாது. அதே வேளையில் கோர்ட்டின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம்.
மெரினா கடற்கரை சாலையில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு சமாதி உள்ளது. சிவாஜி போன்ற தமிழனுக்கு சிலையாக நிற்க கூட உரிமை இல்லை.
அவரது சிலையை அகற்றினால் மெரினா கடற்கரை சாலையில் ஏதாவது ஒரு இடத்தில் வைக்க வேண்டும். வேறு இடத்தில் வைக்க கூடாது. மணிமண்டபத்தில் வைப்பதற்காக சிலையை அகற்றினால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகுதான் அ.தி.மு.க. அமைச்சர்கள் வாய் திறக்கிறார்கள். இதுவரையில் கோமாவில் இருந்த அவர்கள் இப்போது கண்விழித்து பார்க்கிறார்கள். அதுவே மகிழ்ச்சி.
கமல் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம். ஆனால் ஊழலுக்கு வித்திட்டதே திராவிட கட்சிகள்தான். இரு கட்சிகளும் ஊழலில் சளைத்தவர்கள் அல்ல. அப்படி இருக்கும்போது கமல் ஒருவரை மட்டும் குறை கூறியுள்ளார்.
அதனால் அவர் தி.மு.க. பக்கம் சேர்ந்து அரசியல் செய்ய நினைத்தால் அதை எதிர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.