தூத்துக்குடி மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்ட போது எடுத்த படம். 
செய்திகள்

தூத்துக்குடி கடலில் பலத்த காற்று- 140 விசைப்படகுகள் கரைக்கு திரும்பின

தூத்துக்குடி கடலில் பலத்த காற்று வீசுவதால், 140 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் கரைக்கு பத்திரமாக திரும்பினர். மேலும், தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

தூத்துக்குடி:

மேற்கு வங்க கடலில் உருவான புயல் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் கன மழை மற்றும் கடல் சீற்றம் இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்தது. இது தொடர்பாக மீன்வளத் துறை மூலம் மறுஅறிவிப்பு வரும் வரை யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அதே நேரத்தில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து படகுகள் வெளியில் செல்ல முடியாத வகையில் இரும்பு கயிறு கொண்டு தடுப்பு ஏற்படுத்துவது வழக்கம். அதன்படி தடுப்பு ஏற்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

நேற்று காலையில் அங்கு எச்சரிக்கை பலகை இல்லை. அதே நேரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில் போடப்பட்டு இருந்த இரும்பு கயிறும் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கருதினர். மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 140 விசைப்படகுளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் ஆழ்கடலுக்கு சென்ற போது, கடலில் பலத்த காற்று வீசிவருகிறது. இதனால் மீனவர்கள் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் மீண்டும் கரைக்கு திரும்பினர்.

அவர்கள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் உள்ள உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர்.

தங்களுக்கு முறையான வானிலை அறிக்கையை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இதனால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. புயல், மழை காலங்களில் வானிலை எச்சரிக்கை குறித்த நோட்டீஸ் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என நாங்கள் ஏற்கனவே மீன்வளத் துறை அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளோம். ஆனால் தற்போது வரை அந்த நடைமுறையை மீன்வளத்துறை அதிகாரிகள் சரிவர கடைபிடிப்பது இல்லை. இதனால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.