வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே காளிபாளையத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 55). இவர் கால்நடைகள் வளர்த்து வருகிறார். இவற்றிற்கு தீவனம் போடுவதற்காக வைக்கோல் புற்களை வீட்டின் அருகே வைத்திருந்தார்.
இந்நிலையில் வைக்கோல் போரில் திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை.
இது குறித்து நடராஜன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு, தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமையில் சுந்தர், ஸ்ரீரங்கன், கலைச்செல்வன், நடராஜன், ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன், செல்வம், ஆகியோர் கொண்ட குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைக்கோல் போரில் வேகமாக எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.