கோப்பு படம். 
செய்திகள்

சிறுமிக்கு நடக்க இருந்த திருமண நிச்சயதார்த்தம் தடுத்து நிறுத்தம்

திருச்சியில் 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமண நிச்சயதார்த்ததை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

திருச்சி:

திருச்சி மணப்பாறை பகுதியை சேர்ந்த 17 வயது உடைய சிறுமி நர்சிங் பட்டயப் படிப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்தது. இது குறித்து அந்த சிறுமி நேற்று முன்தினம் திருச்சி சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட கேடயம் திட்டத்தின் மூலம் டி.ஐ.ஜி. ஆனிவிஜயாவை நேரடியாக சந்தித்து புகார் கொடுத்தார். அதில், தான் தொடர்ந்து படிக்க விருப்பப்படுவதாகவும், ஆனால் தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறியிருந்தார். 

இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. ஆனிவிஜயா உத்தரவிட்டார். உடனே குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அஜிம், சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணி, ஏட்டு ரமேஷ் ஆகியோர் நேற்று அங்கு சென்று திருமண நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்தினார். மேலும், சிறுமியை மீட்டு குழந்தைகள் நல குழு முன்பு ஆஜர்படுத்தி குழந்தைகள் இல்லத்தில் தங்க வைத்தனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT