செய்திகள்

தூத்துக்குடியில் அரசு பேருந்துகள் மீது கல் வீச்சு - பேருந்து சேவை நிறுத்தம்

தூத்துகுடி மாவட்டத்தில் இன்று இரவு அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. #BanSterlite #TalkAboutSterlite #Stonepelt #GovernmentBuses

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்தபோது அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டார். மாவட்டத்தில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டதால், ஓரளவு இயல்பு நிலை திரும்பியது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் இன்று இரவு சென்று கொண்டிருந்த அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசினர். இதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்ததை அடுத்து, இரவு பேருந்துகள் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். #BanSterlite #TalkAboutSterlite #Stonepelt #GovernmentBuses

SCROLL FOR NEXT