செய்திகள்

தூத்துக்குடியில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு - பதற்றம் நீடிப்பு

தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி பல உயிர்களை பலி வாங்கிய நிலையில், இன்று போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை உருவாக்கியது. #SterliteProtest #PoliceVehiclesTourched

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது உடல்நிலை மோசமாக உள்ளது. துப்பாக்கி சூட்டைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. தூத்துக்குடி நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. 144 தடை உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தூத்துக்குடி பிரைன் நகரில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனங்களுக்கு  தீவைக்கப்பட்டது. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்தது. ஒரு பேருந்தில் பற்றிய தீ சிறிது நேரத்தில் அணைக்கப்பட்டுவிட்டது. மற்றொரு பேருந்தில் பிடித்த தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அருகில் செல்ல முடியவில்லை. இதையடுத்து அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தினர். #SterliteProtest #PoliceVehiclesTourched