சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் இன்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.
ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டதை 27-ம் எண் ரெயில்வே கேட்டின் தண்டவாளம் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.
அப்போது அந்த தண்டவாளம் வழியாக இரு ரெயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின்மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், பஞ்சாப் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பஞ்சாப்பில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை பஞ்சாப்பில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. #Dussehra #Amritsar #TrainAccident