செய்திகள்

மதுக்கடைக்கு எதிராக போராட 6 கிராம மக்கள் இணைந்து புதிய அமைப்பு தொடக்கம்

மதுக்கடைக்கு எதிராக போராட 6 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் இணைந்து ‘‘டாஸ்மாக் எதிர்ப்பு நடவடிக்கை குழு’’ என்ற புதிய அமைப்பை தொடங்கி உள்ளனர்.

மாலை மலர்

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடம்பெரும்பாக்கம், வேம்பாக்கம், பெண்கள் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து குடிமகன்கள் மதுக்கடை கேட்டு போட்டி போராட்டம் நடத்தினர். அருகில் உள்ள மற்றொரு கடையில் ஏறியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த நிலையில் தடப் பெரும்பாக்கத்தில் உள்ள மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த கிராம மக்கள் முடிவு செய்து உள்ளனர். இதற்காக தடப்பெரும் பாக்கம், பொன்நகர், கொக்கு மேடு, வேம்பாக்கம், டி.வி. புரம், சிங்கிலிமேடு ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் இணைந்து ‘‘டாஸ்மாக் எதிர்ப்பு நடவடிக்கை குழு’’ என்ற புதிய அமைப்பை தொடங்கி உள்ளனர்.

இந்த புதிய அமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை தடப்பெரும்பாக்கத்தில் நடந்தது. அதில் மதுக்கடையை மூடும் வரை போராட்டத்தை தீவிரப்படுத்துவது மற்றும் கோர்ட்டில் வழக்கு தொடருவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மதுக்கடை கேட்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவும் குடிமகன்கள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.