சென்னை:
பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று காலை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். விவசாயிகளுக்கு உற்பத்தி விலையில் இருந்து ஒன்றரை மடங்கு லாபம் கிடைக்கும் எனவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பாக மட்டுமே உள்ளது என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பாக மட்டுமே காணப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் தமிழக மக்களின் நலன் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய ரெயில்வே திட்டங்கள், நதிநீர் இணைப்புத் திட்டங்கள் மற்றும் ஒகி புயல் பேரிடர் நிவாரண நிதிகள் குறித்து எந்த அறிவிப்புகளும் இல்லை. வருமான வரி உச்சவரம்பு உயர்வு மற்றும் வீட்டுக்கடன் வட்டி விலக்கு உயர்வு போன்ற எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.
மேலும், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. அரசு 2014 பாராளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் என்ன? அப்போது வெளியிட்ட அறிவிப்புகள் என்ன? எனவே, பா.ஜ.க. அரசு ஒருமுறை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்துள்ளார். #budget2018 #unionbudget #MKStalin #tamilnews