செய்திகள்

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறார் ஸ்டாலின்: தமிழிசை குற்றச்சாட்டு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என ஸ்டாலின் கூறியது, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதையே காட்டுகிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்தில் அவருக்கே நம்பிக்கை இல்லை என்பது அவரது வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது. எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதையே இது காட்டுகிறது.

மேலும், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா, ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தவும், கட்சி தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தவும் அவர் தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் ஆட்சி நடத்தும் அ.தி.மு.க.வை பா.ஜ.க. இயக்கவில்லை. தமிழக அரசு கொண்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு தேவையான உதவிகளை மட்டுமே மத்திய அரசு செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT