செய்திகள்

பதவிச் சண்டைக்குப் பெயர்தான் தர்மயுத்தமாம்: அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து ஸ்டாலின் விமர்சனம்

பதவிச் சண்டைக்குப் பெயர் தான் தர்மயுத்தமாம் என அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

அ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இன்று இணைந்துள்ளன. அத்துடன், இரு தரப்பினரும் கட்சி மற்றும் ஆட்சி  அதிகாரங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இந்த இணைப்பு குறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

பதவிச் சண்டடைக்குப் பெயர் தர்மயுத்தமாம். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக் கொண்டு வருவதற்காக தர்மயுத்தம் நடத்துவதாக கூறியவர்கள், மர்மங்கள் வெளிப்படும் முன்னரே இணைந்து ஒருதாய் மக்கள் ஆகிவிட்டார்கள்.

அ.தி.மு.க. அணிகள் டெல்லியின் கயிற்றில் தொங்கும் தலையாடி பொம்மைகள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் உலகின் மிகச்சிறந்த நடிகர்கள். அ.தி.மு.க. ஆட்சியைப் பயன்படுத்தி பா.ஜ.க. கொல்லைப்புறம் வழியாக தமிழகத்திற்குள் நுழைய முயற்சி செய்கிறது.

பா.ஜ.வி. ஆளுமை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை ஆளுநர் வித்யாசாகர் ராவின் அவசரம் காட்டி உள்ளது. பதவி வேட்கைக்காக டெல்லியின் எடுபிடிகளாக அ.தி.மு.க.வின் இரு அணியினரும் செயல்பட்டுள்ளனர்.

பெரும்பான்மையை இழந்த இந்த ஆட்சி எப்போது வீட்டுக்குப்போகும்? என்ற தமிழகத்தின் எதிர்பார்ப்பு ஜனநாயக வழியில் விரைவில் நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.