அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும், முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்குவதாகவும் கூறி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கடிதங்கள் மீது ஆளுநர் தனது முடிவை தெரிவிக்கவில்லை. ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மும்பையில் இருந்து சென்னை வந்ததையடுத்து, அவரை சந்திக்க தி.மு.க. நேரம் கேட்டுள்ளது.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆளுநர் சட்டப்பேரவயை கூட்டி ஜனநாயகத்தை காப்பார் என நம்புகிறேன். ஆளுநரை சந்திக்க தி.மு.க. சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என 19 எம்.எல்.ஏ.க்கள் கூறியதால் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி தொடர்ந்தால் கவலை இல்லை.
தடை செய்யப்பபட்ட புகையிலை விற்கப்படுவதைத் தான் சபையில் காட்டினேன். பேரவையில் தெரிவித்து பல நாட்களுக்குப் பிறகும் புகையிலை விற்பனை செய்யப்படுகிறது.