செய்திகள்

கிராமசேவகர் பணியை இழிவுபடுத்தியதால் டிவி தொடரை நிறுத்த சிறிசேனா உத்தரவு

இலங்கையில் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராம சேவகர் பணி தொடர்பான நிகழ்ச்சியை நிறுத்த அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். #Sirisena

மாலை மலர்

கொழும்பு:

இலங்கையில் அரசு தொலைக்காட்சியில் ‘கோப்பி கடை’ என்ற பெயரில் சிங்கள தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் “கிராம சேவகருக்கு பைத்தியம்” என்ற பெயரில் ஒரு பாகம் ஒளிபரப்பப்பட்டு வந்தது. அதில் கிராம சேவகருக்கு பைத்தியம் பிடித்து வாள் எடுத்துக் கொண்டு வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

இந்த தொலைக்காட்சி தொடர் பற்றி அறிந்த அதிபர் சிறிசேனா உடனடியாக தொடரை நிறுத்த உத்தரவிட்டார். இதையடுத்து அந்த தொடரின் “கிராம சேவகருக்கு பைத்தியம்” என்ற பெயரில் ஒளிபரப்பான பாகம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதற்கான காரணம் பற்றி விசாரித்தபோது, ருசிகர தகவல் வெளியானது. அதிபர் சிறிசேனா, ஆரம்பத்தில் பொலன்நறுவை கிராமத்தில் கிராம சேவகராக பணியாற்றினார். அதுதான் அவரது முதலாவது அரசு பணியாகும். இதனால் தனது முதலாவது அரசு பணியை அவமதிக்கும் விதமாக டி.வி. தொடர் எடுக்கப்பட்டு இருந்ததால் அதை நிறுத்த உத்தரவிட்டதாக தெரிய வந்தது.

கோப்பி கடை என்ற சிங்கள தொடர் அன்றாட அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.  #Sirisena