செய்திகள்

ராஜபக்சே ஆட்சி கால ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டு: இலங்கை அரசு

ராஜபக்சே ஆட்சி கால ஊழல் வழக்குகளை அனைத்தையும் வேகமாக முடிப்பதற்காக சிறப்பு கோர்ட்டு அமைப்பது என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதில் 3 நீதிபதிகள் இடம் பெறுவார்கள்.

மாலை மலர்

கொழும்பு:

இலங்கையில் ராஜபக்சே ஆட்சி காலத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அரசு கஜானாவில் இருந்து விதிமுறைகளை மீறி பணம் எடுத்தது, அரசு கொள்முதல்களில் ஊழல் செய்தது, பல்வேறு வகைகளில் கமி‌ஷன் பெற்றது என பல்வேறு ஊழல் குற்றச்சாட்டப்பட்டது.

ராஜபக்சேவின் 2 மகன்கள், ராஜபக்சே தலைமை உதவியாளர், மற்றும் ராஜபக்சே குடும்பத்தினர், அவருக்கு வேண்டிய அதிகாரிகள் என பலரும் இந்த ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கிறார்கள். ஆனால் இது சம்பந்தமான வழக்குகள் நீண்டகாலமாக இழுத்தடித்து வருகிறது.

ஒரு வழக்கில் ராஜபக்சேவின் தலைமை உதவியாளர் லலிதாவீரதுங்கா தண்டனை பெற்றுள்ளார். அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற வழக்குகள் எல்லாம் தொடர்ந்து விசாரணை நிலையிலேயே உள்ளன.

எனவே அனைத்து வழக்குகளையும் வேகமாக முடிப்பதற்காக சிறப்பு கோர்ட்டு அமைப்பது என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதில் 3 நீதிபதிகள் இடம் பெறுவார்கள்.

இந்த ஆண்டு மத்தியில் இந்த பணிகள் தொடங்கப்பட்டு மிக விரைவாக வழக்கு விசாரணை நடத்தி தீர்ப்பு கூறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ராஜபக்சேவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. #Tamilnews