செய்திகள்

முத்தரப்பு டி 20 தொடர் - 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

நிதாஹாஸ் டி-20 முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. #NidahasTrophy

மாலை மலர்

நிதாஹாஸ் டி-20 முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

நிதாஹாஸ் டி-20 முத்தரப்பு தொடரில் இந்தியா - இலங்கை இடையிலான முதல் ஆட்டம் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் சமீரா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 1 ரன் எடுத்த நிலையில் நுவான் பிரதீப் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது.
இந்தியாவின் ஸ்கோர் 12.4 ஓவரில் 104 ரன்னாக இருக்கும்போது மணிஷ் பாண்டே 37 ரன்களில் (35 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்ஸ்) ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பந்த் களம் இறங்கினார். அரைசதம் அடித்த தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தவான் 49 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சர்களுடன் 90 ரன்கள் எடுத்தார். 5-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் இரண்டு பவுண்டரியும், ரிஷப் பந்த் ஒரு பவுண்டரியும் அடித்து, கடைசி பந்தில் ஆட்டமிழக்க இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு  174 ரன்கள் எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் 6 பந்தில் 13 ரன்கள் சேர்த்தார்.

அதன்பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குணதிலகா, குஷால் மெண்டிஸ் ஆகியோர் இறங்கினர். இரண்டாவது ஓவரில் வாஷிங்டன் மெண்டிசை அவுட்டாக்கினார்.

அடுத்து களமிறங்கிய குசால் பெராரா அதிரடியாக ஆடினார். அதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. இந்த ஜோடி 58 ரன்கள் சேர்ந்த நிலையில் உனத்கட் குணதிலகாவை வெளியேற்றினார். அதன்பின் இறங்கிய சண்டிமாலும் நீடித்து நிலைக்கவில்லை. சஹால் சுழலில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து உபுல் தரங்கா களமிறங்கினார். மறுமுனையில் பெராரா தனது அதிரடியை தொடர்ந்தார். இவர் 37 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெட் இழப்புக்கு 127 ஆக இருந்தது. அதன்பின் இறங்கிய சனகாவும் தரங்காவும் நிதானமாக ஆடினர். ஆனாலும் சஹால் சுழலில் தரங்கா சிக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து திசாரா பெராரா களமிறங்கினார். இருவரும் பொறுமையாக ஆடினர். கடைசி 4 ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்டது. இருவரும் ஒன்றும் இரண்டுமாக எடுக்க இலங்கை ரசிகர்கள் உற்சாகமாகினர்.

17வது ஓவரில் 11 ரன்களும், 18வது ஓவரில் 16 ரன்களும் எடுக்க இலங்கை அணியின் வெற்றி உறுதியானது. கடைசி 2 ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் முதல் பந்து  வைடு ஆனது. அடுத்த பந்தில் ஒரு ரன்னும், அதற்கடுத்த பந்தில் 2 ரன்னும், மூன்றாவது பந்தில் 4 ரன்னும் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது.
 
அந்த அணியின் திசாரா பெராரா 10 பந்தில் ஒரு சிக்சர், 2 பவுண்டரியுடன் 22ரன்னும், சனகா 18 பந்தில் 15 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை குசால் பெராரா பெற்றார்.